ராஜபக்சேவின் பிரச்சாரக் கூட்ட வேலைகளில் 44 கைதிகள் ஈடுபடுத்தப் பட்டது அம்பலம்
கொழும்பு: இலங்கையில் அதிபர் ராஜபக்சேவுக்கான பிரச்சாரக் கூட்ட வேலைகளில் சிறைக் கைதிகளும் ஈடுபடுத்தப் பட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இக்குற்றச்சாட்டை புகைப்பட ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியுள்ளது.
இலங்கையில் அடுத்தமாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், மாத்தரை பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தை அந்நாட்டின் சிறைச்சாலை துறை அமைச்சர் சந்திரஸ்ரீ ஏற்பாடு செய்திருந்தார். பிரச்சாரக் கூட்டத்திற்கான வேலைகளில் அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பயன்படுத்தி உள்ளார்.
இதற்காக சிறையில் இருந்து அவர் சுமார் 44 கைதிகளை வெளியில் அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது புகைப்பட ஆதாரத்துடன் ஊடகங்களில் வெளி வந்துள்ளது.
கஃபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று இயக்குனரான கீர்த்தி தென்னெக்கோன் இதனை தெரிவித்துள்ளார். சிறைச்சாலை வாகனங்களையும் அமைச்சர் பிரச்சார வேலைகளுக்கு பயன் படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் மூலம் தேர்தல் சட்டங்கள் மாத்திரமல்லாமல், சிறைக் கைதிகள் குறித்த சர்வதேச சட்டங்களும் மீறப்படுவதாகவும் தெரிவித்துள்ள கீர்த்தி, இது தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசு எந்திரத்தை ராஜபக்சே தனது தேர்தல் பிரசாரத்துக்காக தவறாக பயன்படுத்துவதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.