தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் தலைதூக்க விடமாட்டேன்: இது சிறிசேன சபதம்
கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் தலைதூக்க விடமாட்டேன் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி இலங்கை அரசு வெற்றி பெற்றது. 30 ஆண்டுகால உள்நாட்டு போரை இலங்கை ராணுவம் முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் வெற்றித் திருநாளாக இலங்கை அரசு அனுசரித்து வருகிறது. இதன் 6 ஆம் ஆண்டு தினம் இலங்கையின் தெற்கு கடற்கரை நகரமான மதாராவில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலங்கை அதிபர் சிறிசேனா பேசும்போது, நாட்டின் ஒற்றுமை பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் மதிக்கப்பட வேண்டும் என்பதற்கே எனது அரசு முன்னுரிமை கொடுக்கும்.
போருக்கு பின் ராஜபக்சே அரசு இலங்கை தமிழர்களின் நம்பிக்கையை பெறத் தவறிவிட்டது. போரினால் சேதமடைந்த கட்டிடங்களை நிர்மாணிப்பதை காட்டிலும் மக்களின் இதயங்களையும், மனங்களையும் வெற்றி கொள்வதுதான் முக்கியமானது.
நாட்டின் நலனை பாதுகாப்பதில் நீங்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் எனது அரசு உறுதுணையாக இருக்கும். உங்கள் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறேன். எனது எதிரிகள் என்னைப் பற்றி தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் விடுதலைப்புலிகளின் தீவிரவாதச் செயல்களை மீண்டும் தலைதூக்க விடமாட்டேன். அந்த கொடூர இயக்கம் ஒருபோதும் தலைதூக்க அனுமதிக்கப்படமாட்டாது.
இவ்வாறு சிறிசேன தெரிவித்துள்ளார்.