ஐ.நா. அறிக்கையில் 'காட்டம்' இல்லாததற்கு எங்களது நல்லாட்சியே காரணம்..: மார்தட்டும் சிறிசேன, ரணில்
கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையில் இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் இடம்பெறாமல் போனதற்கு தங்களது தலைமையிலான நல்லாட்சிதான் காரணம் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் கூறியுள்ளார்.
கொழும்பில் அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐ. நா. வினால் வெளியிடப்பட்ட அறிக்கை பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் மட்டுமே ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
ஆனால், இந்த அறிக்கையில் கடும் கண்டனங்கள் குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருப்பதைப் பற்றி எவரும் பேசுவதில்லை.
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. அது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மற்றும் முக்கிய தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இறுதிக் கட்ட போரில் கலந்துகொண்ட படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், சில மூத்த அரசியல்வாதிகள் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அறிக்கை குறித்து அச்சமடைந்திருந்தனர்.
தங்களுடைய பெயர்கள் வெளிவந்து விடுமோ என்றும் பயணத் தடைகள் மற்றும் வேறுவிதமான நெருக்கடிகள் தங்களுக்கு ஏற்பட்டுவிடும் என அவர்கள் அஞ்சியிருந்தனர்.
ஆனால் எவருடைய பெயரும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமே காரணம்.
மகிந்த ராஜபக்சே அரசாங்கத்தின் செயற்பாடுகள் சர்வதேச நாடுகளிடம் இருந்து இலங்கையைத் தனிமைப்படுத்தியது. ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சர்வதேச நகர்வுகளுக்கு ஏற்ப செயல்படுகிறது.
ஜனவரி 8ஆம் தேதி இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து உருவான நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளால் புதிய முன்னேற்றம் ஏற்பட்டது. இதனை எவரும் மறுக்க முடியாது.
இதனால் ஜனவரிக்கு முன்னர் தயாரிக்கப்பட்டிருந்த அறிக்கையின் கடுமை குறைக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்த அறிக்கை ஜனவரி 8க்கு முன்னர் அல்லது மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தால் மோசமான சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் இருந்திருக்கும்.
இந்த அறிக்கை தயாரிக்கப்படும் போது சில முக்கிய நபர்களின் பெயர்களையும் சேர்க்கும் சாத்தியம் இருந்தது. பொருளாதாரத் தடை விதிக்கப்படும் சூழல் நிலவியது.
ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இவைகள் இடம்பெறாமல் போயுள்ளன.
சர்வதேச விசாரணையென்று அவர்கள் எதுவும் கூறவில்லை. ஆனால், சர்வதேச விசாரணையா உள்நாட்டு விசாரணையா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்த 2 விசாரணைகளில் ஏதாவது ஒன்றுக்கு நாம் முகம் கொடுத்துத் தான் ஆக வேண்டும். ஆகவே, நாம் கலந்துரையாடல்களை நடத்தி அதற்கான பொறிமுறையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்காக நாட்டில் இனவாதத்தைப்பரப்பி நாட்டை தீயவழியில் இட்டுச் செல்ல சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இதற்கு எந்தவகையிலும் இடமளிக்க முடியாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.