பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை வழங்க மறுப்பது ஏன்? தமிழ் எம்.பி.சிவமோகன் கேள்வி
கொழும்பு: விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கும் அரசு அதற்கான இறப்புச் சான்றிதழை வழங்காதது ஏன் என இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி.சிவமோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17ந் தேதி நடந்த சண்டையில் இலங்கையின் நந்திக்கடல் பகுதியில் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்தது. கொல்லப்பட்டவர் பிரபாகரன்தான் எனக் கருணா உள்ளிட்டோர் உறுதிப்படுத்தியதாகவும் அரசு தெரிவித்தது.
மேலும் விடுதலை புலிகள் அமைப்பின் சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் தலைவர் செல்வராசா பத்மநாதன், பிரபாகரன் இறந்துவிட்டதாக பி.பி.சி.யிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதையடுத்து ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனின் இறப்புச் சான்றிதழைத் தருமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. இருப்பினும் இலங்கை அரசு பிரபாகரன் இறப்புச் சான்றிதழை வழங்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ் எம்.பி. சிவமோகன், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கும் அரசு அதற்கான இறப்புச் சான்றிதழை வழங்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.