இந்திய மீனவர்கள் 11 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களின் படகுகளையும் கைப்பற்றியுள்ள சம்பவம் ரமேஸ்வரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பதால், வாழ்வாதாரம் இல்லாமல் தமிழக மீனவர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் நாட்டுப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை, இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். இவர்கள், எந்தப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்பிடி வலைகளைத் தேடிச் சென்ற போது, காற்றும், மழையும் அதிகமாக இருந்ததால், தவறுதலாக இலங்கைக் கடல்பகுதிக்குள் நுழைந்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் 11 பேரும் மன்னார் கடற்படை முகாமுக்கு இன்று அழைத்துவரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவ அமைப்பினர் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, எல்லை தாண்டியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட நாகையைச் சேர்ந்த மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையின் ரோந்துப்படகைச் சேதப்படுத்தியதாக புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை நவம்பர் 18ம் தேதி வரை சிறையிலடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதும், நாகை மீனவர்கள் மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தமிழக மீனவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.