இந்திய நிறுவனத்திடம் லஞ்சம்.. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மகன் நமல் அதிரடி கைது
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்ஷேயின் மூத்த மகன் நமல் ராஜபக்ஷே, நிதி முறைகேடு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த கிரிஷ் குரூப் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், 2013ல் இலங்கை அரசுடன் சுமார் 650 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் தொழிலுக்கு ஒப்பந்தம் செய்தது. முக்கியமான இடத்திலுள்ள நிலங்களை அந்த நிறுவனத்திற்கு வழங்குவதற்காக அப்போது ஆட்சியில் இருந்த ராஜபக்ஷேவின் குடும்பத்தாருக்கு லஞ்சப் பணம் கைமாறியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து அந்த நாட்டு நிதி குற்றவியல் பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். 450 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு லஞ்சம் கைமாறியுள்ளதாக போலீசார் கூறுகிறார்கள்.
இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது கிரிஷ் குரூப் வழங்கிய பணத்தை கொண்டு நமல் ராஜபக்ஷே, ரக்ஃபி போட்டி தொடருக்கு ஸ்பான்சர் செய்தது தெரியவந்தது. அதோடு, கிரிஷ் குரூப் கட்டுமான தொழிலில் ஈடுபட தடையும் விதிக்கப்பட்டது. அந்த குரூப்போ, முறைகேடு நடைபெறவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறது.
இந்நிலையில், இன்று நமலிடம் விசாரணை நடத்திய போலீசார், குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்ததாக கூறி அவரை கைது செய்துள்ளனர். இவர் நாடாளுமன்ற எம்.பியாகும்.
நமலின் சகோதரர் யோஷிதா ஸ்போர்ட்ஸ் டிவி சேனல் தொடர்பாக, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
ராஜபக்ஷே அரசில் அவரது குடும்பத்தார் அதிகாரம் செலுத்தி வந்தனர். இதனால் முறைகேடாக பல வகைகளில் ராஜபக்ஷே, குடும்பத்தார் பணம் சம்பாதித்திருப்பது ஒவ்வொன்றாக அம்பலமாகிவருகிறது.