பிரபாகரன் ஒழுக்கமிக்கவர், கட்டுப்பாடுமிக்க தலைவர்- மாஜி சிங்கள ராணுவ தளபதி கமால் குணரத்ன புகழாரம்!
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்டவர்; கடவுள் நம்பிக்கையவற்றர்; தாம் எடுத்த முடிவுகளில் உறுதியானவராக இருந்தவர் என்று இலங்கை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற தளபதி கமால் குணரத்ன புகழாரம் சூட்டியுள்ளார்.
2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவர் கமால் குணரத்ன. இவர் மீது போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை ராணுவத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி ஓய்வு பெற்றார் கமால் குணரத்ன. அவர் தற்போது நந்திக்கடலுக்கான பாதை' என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
இதனிடையே இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு கமால் குணரத்ன அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஒழுக்கம், கட்டுப்பாடு
பிரபாகரன் படிக்காதவராக இருந்தாலும் தம்மையும் தம்மைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தை கடைபிடித்தவராக இருந்தார். தற்கொலைப் படைத் தாக்குதலை அல்கொய்தா இயக்கத்துக்கு முன்னரே அறிமுகப்படுத்தியவர் பிரபாகரன். 200 தற்கொலைப் படையினரை அவர் தம்மிடம் வைத்திருந்தார்.
பெண் தற்கொலைப்படை
பிரபாகரனின் தற்கொலைப் படையினரில் பெரும்பாலானோர் பெண்கள். தங்களது தலைவரின் கட்டளையை ஏற்று உயிரைக் கொடுக்க அவர்கள் தயாரானவர்களாகவே இருந்தனர்.
மது அருந்தாதவர்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளிகளை ஒருபோதும் அவர் தவறாகப் பயன்படுத்தியதே இல்லை. விடுதலைப் புலிகள் தொடர்பாக 10,000 போட்டோக்களைக் கைப்பற்றியிருக்கிறோம்... ஆனால் எந்த ஒரு படத்திலும் பிரபாகரன் மது அருந்தியவராக இல்லை... மிகவும் ஒழுக்கமான தலைவராக இருந்தவர் பிரபாகரன். ஷரியத் சட்டத்தின் கீழ் நீங்கள் திருடியிருந்தால் கையைத் தான் இழப்பீர்கள்... ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழந்துவிடுவீர்கள்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்
அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை அவர் நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். பிரபாகரன் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தன.
ராஜீவ்கொலையால்...
எந்த ஒரு முடிவை எடுத்தாலும் சரியோ தவறோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுகிறவராக இல்லை. ராஜீவ்காந்தியை கொல்வதன் மூலம் உலகமே தமக்கு எதிராக திரும்பும் என்பது அவருக்கு தெரியும். ஆனால் இந்திய அமைதிப் படையை கொண்டுவந்ததற்காக பழிவாங்க நினைத்தார் பிரபாகரன்.
சிறப்பான தளபதிகள்..
பிரபாகரன் தம்முடைய தாக்குதல்களை நடத்த சரியாண தருணத்துக்காக காத்திருந்தார். அவரது தலைமை கடைசி யுத்தம் வரை திறன்வாய்ந்ததாக இருந்தது. தளபதிகள் பாணு, ரத்னம் மாஸ்டர், சூசை என சிறப்பான தளபதிகள் அவரிடம் இருந்தனர்.
இவ்வாறு கமால் குணரத்ன கூறியுள்ளார்.