இலங்கை வட க்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக ஊழல் அமைச்சர்கள் போர்க்கொடி
இலங்கை வடக்கு மாகாண சபையில் ஊழல் செய்த அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ய முதல்வர் விக்னேஷ்வரன் உத்தரவிட்டதால், அவருக்கு எதிராக ஆளுனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு : இலங்கை வடக்கு மாகாண சபையின் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றும் கோரிக்கைக் கடிதம், ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில், கடந்த வாரம் மீன்பிடி போக்குவரத்துத்துறை, சுகாதாரத்துறை அமைச்சர்கள் உட்பட 4 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. இதுகுறித்த அறிக்கை மீதான விவாதம் ஜூன்14ம் தேதி நடைபெற்றது. அப்போது பேசிய வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அமைச்சர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, நடைமுறை மாற்றம் ஒன்றை வடமாகாண சபை உறுப்பினர்களும் மக்களும் விரும்புவதாக தெரிவித்தார்.
எனவே அமைச்சர்கள் குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் தாமாகவே முன்வந்து, தமது பதவிகளை இன்றுக்குள் ராஜினாமா செய்யுமாறும் அவர்கேட்டுக்கொண்டார். மேலும் மற்ற அமைச்சர்கள் இரண்டு பேரும் விசாரணை முடியும் வரை ஒரு மாதம் விடுப்பில் சென்றுவிடுமாறும் விக்னேஷ்வரன் வலியுறுத்தினார்.
இந்நிலையில் முதல்வர் விக்னேஷ்வரனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அமைச்சர்கள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் கடிதம் அளித்துள்ளனர். இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட வடக்கு மாகாண ஆளுநர், சட்டத் திருத்திற்கு உட்பட்டு இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, பிரிவினை வாதத்தை தூண்டும் விதமாக செயல்பட்டு வரும் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என, முன்னாள் அதிபர் ராஜபக்ஷே வலியுறுத்தியுள்ள நிலையில், அமைச்சர்கள் ராஜினாமா விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.