விடுதலை வேண்டி... இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் திடீர் உண்ணாவிரதம்!
கொழும்பு: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் தங்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை கடற்படையினரால் 38 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த இந்த மீனவர்கள்.
கைது செய்யப்பட்ட அம்மீனவர்கள், இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இம்மீனவர்களின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. நாளை மீண்டும் அவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை முதல் திடீரென அம்மீனவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.