இலங்கை ராணுவ கெடுபிடிகளுக்கு இடையே யாழில் உணர்வுப்பூர்வமாக மாவீரர் நாள்!!
யாழ்ப்பாணம்: இலங்கை ராணுவத்தின் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு நவம்பர் 27-ந் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வீரவணக்கம் செலுத்துவது வழக்கம். 2008ஆம் ஆண்டு வரை நவம்பர் 27-ந் தேதியன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மாவீரர்களுக்கு வீரவணக்க சுடரேற்றி உரையாற்றுவது வழக்கம்.
அதற்கு பின்னரும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளில் மாவீரர் நாள் எழுச்சியோடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்குப் பகுதியில் இலங்கை ராணுவத்தின் தடைகளைத் தாண்டி மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நண்பகல் 12 மணியளவில் மணி ஓசை எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள், பேராசிரியர்கள் ஒன்று திரண்டு தமிழீழ விடுதலைக்காக உயிரைக் கொடுத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். அப்போது இலங்கை ராணுவத்தினர் உள்ளே நுழைந்து அனைவரையும் புகைப்படம் எடுத்தனர். அதைப்பற்றி கவலைப்படாமல் உணர்வுப்பூர்வமாக அனைவரும் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
முன்னதாக இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோயில் முன்பாக மாவீரர்களுக்கான நினைவுச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினார் வடக்கு மாகாண சபை உறுப்பினரான சிவாஜிலிங்கம். இதனைத் தொடர்ந்து பெரிய தேவாலயம் சென்று அங்கு மெழுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினார்.