நாடாளுமன்றத் தேர்தல்.. யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் தமிழர் கட்சிகளின் பிரசாரம்
யாழ்ப்பாணம்: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் தமிழர் தாயகமான யாழ்ப்பாணத்தில் தீவிரமடைந்துள்ளது. அங்கு பல்வேறு தமிழர் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தீவிரப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன. யாழ்ப்பாணம் முழுவதும் இவர்கள் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். போலீஸாரின் பல்வேறு கெடுபிடிகள், தடைகள், கட்டுப்பாடுகள் இருந்தபோதும் பிரசாரம் சூடாகவே உள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்டோர் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசினர். அவர்களது ஆதரவாளர்களும், பெரும் திரளான மக்களும் பிரசாரத்தைக் கேட்க வந்திருந்தனர்.
இதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதலாவது பொதுக்கூட்டம் வரலாறு புகழ்மிக்க வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கர்னல் கிட்டு உள்ளிட்ட 10 முக்கிய புலிகளின் தலைவர்களின் நி்னைவிடங்கள் அமைந்துள்ள இடத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவீரர்கள் நினைவு பாடலைப் பாடிய பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது.