தமிழ் எம்.பி. ரவிராஜ் கொலை: 9 ஆண்டுக்குப் பின் இலங்கை கடற்படை வீரர் 3 பேர் கைது!!
கொழும்பு: இலங்கை தமிழ் எம்.பி. நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை கடற்படை வீரர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் எம்.பி. நடராஜா ரவிராஜ் காரில் சென்று கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருப்பதாக அப்போது அதிபராக இருந்த ராஜபக்சே கூறினார்.
ஆனால் இது இலங்கை அரசின் சதி வேலை என்று ரவிராஜின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். அரசு எதிர்ப்பாளர்களை கடத்திச் செல்வது மற்றும் கொலை செய்வது போன்ற அட்டூழியங்களில் ராஜபக்சே அரசு ஈடுபட்டதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.
இலங்கையில் சிறிசேனா புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பாக இலங்கை கடற்படையைச் சேர்ந்த 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.