இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் தேர்வு- சபாநாயகர் அறிவிப்பு
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜெயசூர்யா அறிவித்துள்ளார். அந்நாட்டில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழருக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவை சிங்கள கட்சிகள் அனைத்தும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளன. இந்த நிலையில் அரசாங்கத்தில் இணையாத 16 எம்.பி.க்களைக் கொண்ட 3வது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் இயல்பாகவே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமைய வேண்டும்.
ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் நாங்கள் அரசாங்கத்தில் இணையவில்லை; இதனால் எங்களுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று கோரியது. இந்த கோரிக்கையை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன நிராகரித்துவிட்டார்.
இதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கருஜெயசூரிய இன்று தேர்வு செய்து அறிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபராக ஜே.ஆர் ஜெயவர்த்தன பதவி வகித்த காலத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1983ஆம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி வரை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார். தற்போது 32 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.