திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கு தாரைவார்க்கிறது இலங்கை: இரா. சம்பந்தன் பகீர் தகவல்
கொழும்பு: தென்னாசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கு தாரை வார்க்க இலங்கை முடிவு செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பகீர் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இரா. சம்பந்தன் நேற்று பேசியதாவது:
சீனாவிடம் இருந்து இலங்கை அரசு பெரிய அளவில் அதிக வட்டிக்கு கடன்களைப் பெறுகிறது. சீனாவோ இலங்கையில் பெரிய அளவில் தன்னுடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இந்தியாவை ஒதுக்குவதா?
இப்படி சீனாவை சார்ந்திருப்பதன் மூலம் இந்தியாவின் தலையீட்டை ஒதுக்கி வைக்கிறது இலங்கை. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகால உறவும் நெருக்கமும் உண்டு.
சுயநல சீனா
ஆனால் சீனா அப்படி இல்லை.. அது தனது குறுகிய நலன்களுக்காக மட்டுமே சிந்திக்கும்.
சீனாவுக்கு திருகோணமலை
இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் கூட திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய- இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானது
இது இந்தியா- இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானது. இலங்கையில் இதற்கு முன்னர் இப்படியான நிகழ்வுகள் நடைபெறாத நிலையில் இந்த நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
இவ்வாறு இரா. சம்பந்தன் கூறினார்.
ஏன் திருகோணமலை முக்கியம்?
திருகோணமலை துறைமுகத்தை வேறு எந்த ஒரு நாட்டின் பயன்பாட்டுக்கும் இலங்கை அனுமதிக்கக் கூடாது என்று இந்திரா, ராஜிவ் காலத்தில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ராஜிவ்காந்தி காலத்தில் போடப்பட்ட இந்தியா- இலங்கை ஒப்பந்தத்திலும் இது இடம் பெற்றுள்ளது. இதனால்தான் திருகோணமலை சம்பூரில் இந்தியாவே அனல்மின் நிலையம் அமைக்கவும் முன்வந்தது.
தற்போது இந்தியாவை ஏமாற்றிவிட்டு திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை தாரை வார்க்க முற்பட்டால் இருநாடுகளிடையேயான உறவில் பெரும் விரிசல் விழும்.