போர்க்குற்ற விசாரணையை இலங்கையே நடத்துவதா? கொந்தளிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
யாழ்ப்பாணம்: போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசே நடத்தலாம் என்ற அமெரிக்காவின் நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் இலங்கை அரசு குற்றத்தில் ஈடுபட்டதாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் புகார் செய்யப்பட்டது.
இது குறித்து அமெரிக்கா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. போர்க்குற்றத்தை சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் ராஜபக்சே ஆட்சி ஒழிந்தது. மைத்ரிபால சிறிசேன அரசு பதவியேற்றவுடன் தற்போது அமெரிக்கா தனது நிலையை மாற்றி கொண்டது.
போர்க்குற்றத்தை சர்வதேச விசாரணை நடத்துவதற்கு பதிலாக இலங்கை அரசிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளும் அமெரிக்காவின் இந்த நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் ஆகிய 3 கட்சி தலைவர்கள் இது தொடர்பாக விவாதித்தனர்.
இலங்கை அரசு நடத்தும் போர்க்குற்ற விசாரணையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு போதும் உரிய நீதி கிடைக்காது. எனவே, சர்வதேச விசாரணை நடத்துவது தான் சரியானது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.