யாழ்ப்பாணத்தில் 2 தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை- 5 போலீசார் கைது
யாழ்ப்பாணம்: இலங்கை போலீசாரால் யாழ்ப்பாணத்தில் 2 தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில்-குளப்பிட்டி சந்தியில் விபத்து ஒன்றில் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நடராஜா கஜன், பவுண்ராஜ் சுலக்சன் ஆகியோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் விபத்து நடந்த போது துப்பாக்கிச் சூடு சப்தங்கள் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து யாழ்ப்பாண மருத்துவமனையை மாணவர்கள் முற்றுகையிட்டு பிரேத பரிசோதனைக்கு வலியுறுத்தினர். அப்போது 2 மாணவர்களுமே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது உறுதியானது.
இது யாழ்ப்பாணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவர்கள் படுகொலைக்குக் காரணமான 5 போலீசாரை கைது செய்துள்ளதாகவும் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.