ஜன. 26ல் சிறிசேன மரணம்.. ஆரூடம் சொன்ன 'ராஜிவை அடித்த' விஜித றோகண கைது
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன ஜனவரி மாதம் 26ம் தேதி நிச்சயம் மரணம் அடைவார் என்று வீடியோ மூலம் ஆரூடம் சொன்ன சோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே வீடியோவில் பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவி ஏற்பார் என்
கொழும்பு: இலங்கை அதிபராக உள்ள மைத்திரிபால சிறிசேன மரணம் அடைவார் என்றும் அந்தப் பதவியில் கோத்தபய ராஜபக்ச அமர்வார் என்றும் ஆரூடம் கூறிய சோதிடர் விஜித றோகண கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் சமூக வலைதளங்களில் சோதிடர் விஜித றோகண பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வீடியோவில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன ஜனவரி 26ம் தேதி மரணம் அடைவார் என்றும் அவ்வாறு நடக்கவில்லை என்றால் தான் ஆரூடம் கூறப் போவதில்லை என்றும் விஜித றோகண கூறியிருந்தார்.
மேலும், அதிபர் மைத்திரிபால சிறிசேன மரணம் அடைந்த பின்னர், அந்தப் பதவியில் முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ச அமர்வார் என்றும் அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தது. மேலும், மகிந்த ராஜபக்ச பிரமராக நிச்சயம் பதவி ஏற்பார் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வீடியோ வெளியாகி இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாரால் விஜித றோகண கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசாரால் கைது செய்யப்பட்ட சோதிடர் விஜித றோகண யார் தெரியுமா? 1987ஆம் ஆண்டு கொழும்பில் அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கியவர்தான் இந்த சோதிடர் விஜித றோகண. ராஜீவ்காந்தியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், பிரேமதாச அதிபராக இருந்த போது பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலையானார்.