24 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்த "யாழ் தேவி" ரயில்
யாழ்ப்பாணம்: 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் வடபகுதியில் "யாழ்தேவி" ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு கடந்த 29 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்தது. அப்போது தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் போர் தீவிரமாக நடந்தது.
கடந்த 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த கடும் சண்டையின் போது இப்பகுதியில் இருந்த ரயில் தண்டவாளங்கள் சேதம் அடைந்தன. இதைத் தொடர்ந்து யாழ்தேவி என்ற பெயரில் இயக்கப்பட்ட ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
Yal Devi- From Kolom Pura to Yapa Patuna-Fruits of Peace in #SriLanka pic.twitter.com/OVy8nXaGMV
— Bandula Jayasekara (@bundeljayse) October 13, 2014
இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு போர் முடிவடைந்தது. அதையடுத்து இப்பகுதியில் மீண்டும் ரயில்வே தொடங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்தது.
இதற்கான பணியில் இந்திய ரயில்வே துறை ஈடுபட்டது. மீண்டும் ரெயில் பாதை சீரமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. இதற்காக ரூ.4800 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ரயில் பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று "யாழ்தேவி" ரயில் சேவை இயக்கப்பட்டது. பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில் சேவையை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இன்று தொடங்கி வைத்தார். பின்னர் ரயிலில் பயணித்தபடியே கொடிகாமம், நாவற்குழி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை 24 ஆண்டுகளுக்குப் பின்னர் "யாழ்தேவி" ரயில் வந்தடைந்தது.