வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் தமிழகத்தில் வங்கி சேவை முற்றிலுமாக முடங்கியது!
சென்னை:தமிழகம், புதுவை உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை இன்று வேலைநிறுத்தம் செய்ததால் வங்கிப் பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டன.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மும்பையில் இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகளுடன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகம், புதுவை, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறினார்.
ஊதிய உயர்வு விகிதத்தில்தான் பிரச்னை: ""ஊதிய உயர்வை கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் முதல் செயல்படுத்த இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
எனினும், ஊதிய உயர்வு விகிதத்தை 23 சதவீதத்திலிருந்து ஓரளவு குறைத்துக் கொள்வதாக திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியபோதிலும், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முடியும் என்ற பழைய நிலைப்பாட்டிலிருந்து மாற முடியாது என நிர்வாக அமைப்பினர் கூறி விட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது'' என்றார் சி.எச். வெங்கடாசலம்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு வங்கி ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிற மாநிலங்களில்...இதே போன்று, டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் டிசம்பர் 3-ஆம் தேதியும், மேற்கு வங்கம், ஒடிஸா, பிகார், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 4-ஆம் தேதியும், மகாராஷ்டிரம், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 5ம் தேதியும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
பாதிப்பு:
தமிழகத்தை பொறுத்தளவில் இன்று நடந்த ஸ்டிரைக்கால் வாடிக்கையாளர்கள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் வங்கிப் பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டது. சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் வங்கிகள் செயல்படவில்லை.
பல ஆயிரம் கோடி மதிப்புள்ள காசோலைகள் மற்றும் பணப்பரிமாற்றம் முடங்கியது. வர்த்தகர்களும், வாடிக்கையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இன்று ‘ஸ்டிரைக்' நடைபெற்றதையொட்டி அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் நேற்றே பணம் இருப்பு வைக்கப்பட்டது. இதனால் ஏ.டி.எம். மையங்கள் வழக்கம் போல் திறந்து இருந்தன. அதில் பணம் இருக்கும் வரை எடுத்துக் கொள்ளலாம். வங்கிகள் மூடப்பட்டதால் ஆதார் அட்டை பதிவு செய்யும் பணி நடைபெறவில்லை. இது ஒரு நாள் ஸ்டிரைக் என்பதால் நாளை முதல் வங்கிப்பணிகள் வழக்கம் போல் செயல்படும்.