அன்று திருமுருகன் காந்தி...இன்று வளர்மதி...கொந்தளிக்கும் இளைஞர்கள்!
மக்களின் பிரச்னையான ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வந்த மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கடந்த மே21ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் நடத்த மே 17 இயக்கம் திட்டமிட்டது, ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி அஞ்சலி செலுத்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மெரினாவிற்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 17 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மக்களிடையே விழிப்புணர்வு
இந்நிலையில் சேலத்தை சேர்ந்த இதழியல் பயிலும் மாணவி வளர்மதி ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்திற்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் நடத்தி வருகிறார். கடந்த 12ம் தேதி சேலத்தில் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சேலத்தில் கைது
நகக்சலைட்டுகளுக்கு ஆள் சேர்ப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார் வளர்மதி. வளர்மதியை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்வதாக சேலம் காவல்துறை ஆணையர் சஞ்சய்குமார் உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்த வளர்மதி சேலம் சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
நக்சலைட்டுக்கு ஆள் சேர்த்தாரா?
மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்திற்கு பலரும் அவரது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக போராடினால் நக்சலைட் , மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்துவதும் தொடர்ந்து போராடும் செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டம் போடுவதும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கங்காணி வேலை பார்க்கும் இந்த அரசின் வாடிக்கையாகி விட்டது என்று விமர்சித்துள்ளனர்.
எச்சரிக்கும் இளைஞர்கள்
தொடர்ந்து மக்கள் நலனுக்காக போராடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று இளைஞர்கள்
கொந்தளித்துள்ளனர். தேன் கூட்டில் கை வைத்தது தமிழக காவல்துறை, அதன் விளைவுகளை நிச்சயம் தமிழக காவல் துறை சந்திக்க வேண்டிவரும் என்று தங்களின் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.
சிறந்த மாணவிக்கு கிடைத்த பரிசு
சிறு வயது முதலே படிப்பில் சிறந்து விளங்கிய மாணவி அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பரிசுகளை வாங்கிக் கொடுத்துள்ளார். இப்போது மக்கள் நலனுக்காக போராடியதால் குண்டர் சட்டத்தை அதிமுக அரசு பரிசாகத் தந்துள்ளது என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.