கடலூர் முகத்துவாரத்தில் மீண்டும் கவிழ்ந்த 10 படகுகள் – 9 மீனவர்கள் படுகாயம்
கடலூர்: கடலூர் முகத்துவாரம் பகுதியில் மீண்டும் ஒன்றன் பின்னர் ஒன்றாக 10 படகுகள் கவிழ்ந்ததில் 9 மீனவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மீன்பிடித் துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்த வலியுறுத்தி ஏற்கனவே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரதோப்பு உள்ளிட்ட 10 மீனவ கிராம மக்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். முகத்துவாரப்பகுதியில் ஆழம் குறைவாக இருப்பதால் படகுகள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடலூர் முகத்துவாரப்பகுதியில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தொடரும் உயிரிழப்புகளை தடுக்க முகத்துவாரப்பகுதியை ஆழப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத்தவறினால் மீனவர்கள் அனைவரும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் 10 படகுகள் ஒன்றின் பின்னர் ஒன்றாக கவிழ்ந்து, 9 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.