குடியரசுத் தலைவர் தேர்தல்: சுஸ்மா முதல் ரஜினி வரை பட்டியலில் இருக்கும் 10 பேர் - வேட்பாளராவது யார்?
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான கவுன்டவுன் தொடங்கியுள்ள நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் பரிசீலனையில் 10 பேர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இந்த பரிசீலனையில் 10 பேர் உள்ளதாக கூறப்படுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் குடியரசுத் தலைவர் தேர்தலை பெரும்பான்மை பலத்துடன் பாஜக சந்திக்கிறது. 14வது குடியரசுத் தலைவர் தேர்தல் அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அந்தக் கட்சிக்கு அமைந்துள்ளது. பாஜக வேட்பாளருக்கே ராஷ்டிரபதி பவன் செல்வதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது. எனினும் வேட்பாளரை தேர்வு செய்வதில் பலரது பெயர்கள் அடிபடுகின்றன.
கடந்த 2 மாதங்களாகவே பாஜக வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு, மற்றும் தமிழகத்தை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்தின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் இந்த பட்டியலில் தற்போது மேலும் பலர் சேர்ந்துள்ளனர்.
பாஜக சார்பில் முன் நிறுத்தும் வேட்பாளர் குறித்த வியூகங்கள் நாள்தோறும் வெளியாகி வரும் நிலையில் பாஜகவை சார்ந்த ஒருவர் மட்டுமே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் பலம்
முதன்முறையாக பாஜக பெரும்பான்மை பலத்துடன் குடியரசுத் தலைவர் தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் எதற்காக மாற்றுக் கட்சி வேட்பாளரை முன்மொழிய வேண்டும் என்பதே அந்த கருத்தின் உள்நோக்கம் என்றும் சொல்லப்படுகிறது. எனினும் குடியரசுத் தலைவர் பதவிக்காக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் பரிசீலிக்கப்படும் பெயர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
சுமித்ரா மகாஜன்
குடியரசுத்தலைவர் வேட்பாளர் பட்டியலில் சுமித்ரா மகாஜனின் பெயர் அடிபடுவதற்கான முக்கிய காரணம் அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணம் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதே என்று கூறப்படுகிறது. மத்திய பிரதேச மாநில எம்பியாக உள்ள இவர், லோக்சபா சபாநாயகராகவும் உள்ளார்.
திரெளபதி முர்மு
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருக்கிறார் திரௌபதி முர்மு, இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெறுவார். குடி தேர்தல் குறித்த பேச்சுகள் தொடங்கிய போது முதலில் அடிபட்டதே இவரின் பெயர் தான்.
சுஷ்மா ஸ்வராஜ்
வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள சுஷ்மா ஸ்வராஜின் பெயர் குடியரசுத்தலைவர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக கிசுகிசுக்கப்படுகிறது. பாஜகவின் மூத்தத் தலைவரான இவருக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டு கட்சிகளும் பச்சைகொடிகாட்டியதாக தெரிகிறது. உடல்நலக்குறைவு காரணமாக வெளியுறவுத்துறை அமைச்சக பொறுப்பை தொடர முடியாத நிலையில் உள்ளதால் அவர் இந்தப் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
கரியமுண்டா
லோக்சபா முன்னாள் சபாநாயகரான கரியமுண்டா, ஜார்க்கண்ட் மாநில பழங்குடியினத்தை சேர்ந்த தலைவர். ஜார்க்கண்ட்டில் எளிமையான வாழ்க்கை முறையில் மக்கள் பலரின் ஆதரவைப் பெற்றுள்ள இவரும் இந்த குடியரசுத் தலைவர் வேட்பாளர் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளாராம்.
தவர் சந்த் கெலாட்
மத்திய அமைச்சர், தலித் தலைவர் என்பதோடு ஆர்எஸ்எஸ் ஆதரவும் இருப்பதால் தவர் சந்த் கெலாட் பெயரும் ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி ஆகிய இரண்டு பொறுப்புகளில் ஒன்று இவருக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் டெல்லி வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த்
தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து பெயர் சம்பாதிக்க நினைக்கும் பாஜக, ரஜினியை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த அறிவிக்கை வருவதற்கு முன்பிருந்தே ரஜினிகாந்தின் பெயர் முதலில் இருந்தே கிசுகிசுக்கப்படுகிறது.
ஸ்ரீதரன்
அரசியல் சாராத ஒருவரின் பெயரும் தற்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் சேர்ந்துள்ளதாக கூறப்படுவது தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகளுக்கான திட்டங்களை வகுத்த ஸ்ரீதரன் அறிவிக்கப்படலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த தேர்வு அனைவரையும் வியப்படையச் செய்துள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
மீராகுமார்
லோக்சபா முன்னாள் சபாநாயகரான மீராகுமாரின் பெயரும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பரிசீலனையில் உள்ளது. ஆனால் இவரது பெயரை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்துள்ளன. ஐக்கிய கூட்டணி ஆட்சியின் போது சிறந்த சபாநாயகராக இவர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலகிருஷ்ண காந்தி
மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ணகாந்தி எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஏறத்தாழ இவரின் பெயரை எதிர்க்கட்சியினர் உறுதி செய்துள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பபு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
சரத்யாதவ்
ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி. தற்சமயம் இந்திய நாடளுமன்ற மேலவையான ராஜ்யசபாவில் பிகார் மாநில உறுப்பினராக உள்ளார். இந்திய லோக்சபாவிற்கு ஏழுமுறையும், ராஜ்யசபைக்கு இருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய ஜனதா தளம் உருவான காலத்திலிருந்து அக்கட்சியின் தேசியத் தலைவராக உள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பரிசீலிக்கப்படும் பெயர்களில் இவர் பெயரும் உள்ளதாக தெரிகிறது.