தினகரன் அணிக்கு மேலும் 13 எம்எல்ஏக்கள் ஆதரவு?
சென்னை: டிடிவி தினகரனின் அணிக்கு மேலும் 13 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இப்போதுள்ள அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிந்து கிடந்த அதிமுக அணிகள் நேற்று முன்தினம் ஆளுநர் முன்னிலையில் ஒன்றிணைவதாக அறிவித்தன.
ஆனால் கட்சி யார் கட்டுப்பாட்டில் என்பதில் பெரிய சிக்கல் நிலவுகிறது. கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் உள்ளனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
இவர்களை நீக்கிவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் குழுவினர் கூறினாலும், இன்னமும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
ஆனால் டிடிவி தினகரன் தரப்பு தங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேர் இருப்பதாகக் கூறிவருகிறது.
இதுவரை 19 பேர் ஓபன் ஆதரவு
இவர்களில் 19 பேர் வெளிப்படையாக தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், ஆளுநரைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றுமாறு தனித்தனியாகக் கடிதம் அளித்துள்ளனர்.
புதுச்சேரியில் தங்கல்
இந்த 19 பேரும் இப்போது புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கருணாஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை பின்னர் தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.
மேலும் 13 பேர் ஆதரவா
மேலும் 3 அமைச்சர்கள் உள்பட இன்னும் 13 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாகவும், தேவையான சூழலில் அவர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.