ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 10 கம்பெனி துணை ராணுவம்: சக்சேனா
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 10 கம்பெனி துணை ராணுவம் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 13-ந் தேதி நடக்கிறது. அதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் என 4 முனைப்போட்டி நடக்கிறது.
எனவே, ஸ்ரீரங்கத்தில் வேட்பாளர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்று, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைக்கிறார்.
டெல்லி புறப்படுவதற்கு முன், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் சக்சேனா. அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு :-
கேள்வி:- ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன?
பதில்:- ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 10 கம்பெனி (ஒரு கம்பெனியில் 65 வீரர்கள் இடம் பெறுவார்கள்) துணை ராணுவ வீரர்கள் வருகிறார்கள். அவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவார்கள்.
கேள்வி:- பிரசாரத்துக்கு கட்சிகள் அளித்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் மாற்றம் எதுவும் உள்ளதா?.
பதில்:- அப்படி எதுவும் மாற்றம் இல்லை.
இவ்வாறு சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.