என்னது கமல் படம் கேஸ் இல்லாம ரிலீசாகுதா?.. பாபநாசத்துக்கு தடை கேட்க லட்டு மாதிரி 8 காரணங்கள்!
சென்னை: கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் பாபநாசம் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. மலையாளத்தின் திரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேக் இது என்றாலும், கமல் நடிப்பில், நெல்லை வட்டார தமிழில் பாபநாசம் திரைப்படத்தை கண்டுகளிக்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர். ஆனால், இதில் ஒரு ஆச்சரியம். சமீபகாலமாக கமல் படங்களுக்கு அடுத்தடுத்து ஏதாவது ஒரு இடையூறு விளைவிக்கப்பட்டு வந்த நிலையில், பாபநாசம் படம் அறிவித்த அதே தேதியில் ரிலீஸ் ஆகிறது.
இரு டிரைலர்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சர்ச்சையில்லை. இதனால் கமல் படத்துக்கான 'கெத்து' குறைந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. எனவே, முந்தைய படங்களின் அனுபவத்தை வைத்து, பாபநாசம் படத்துக்கு தடை கேட்க 'சமூகபோராளிகள்' 8 காரணங்களை கண்டுபிடித்து வைத்திருக்கலாம். அப்படி கண்டுபிடித்தால் அந்த காரணங்களை எவையாக இருக்கும்.
சாலை விதி
இரு சக்கரவாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்கிறது, சாலை விதிமுறை. ஆனால் பாபநாசம் திரைப்படத்தில், கமல் தனது டிவிஎஸ் 50 பைக்கில், இரு மகள்கள், மனைவி சமேதமாக ஜாலியாக செல்கிறார். இது சாலை விதிமுறையை மீறிய செயல் அல்லவா. நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா.
எழுத்தே சரியில்லையே
பாபநாசம் என்று திரையில் காண்பிக்கும்போது, அது கோணலாக உள்ளது. கையெழுத்து நீட்டாக இல்லை. புதிதாக தமிழ் கற்க முயல்வோர், தமிழ் மொழி குறித்து நல்ல எண்ணம் கொள்வார்களா? தமிழ் மொழியை சரியாக எழுதாமல் மெத்தனம் காட்டிவிட்டார் கமல் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியேவிட்டால், இது மோசமான முன்னுதாரணாகிவிடும். எல்லோரும் பட டைட்டிலை கிறுக்கலாக எழுத ஆரம்பித்துவிடுவர்.
ஹெல்மெட் எங்கே
தமிழகத்தில் ஜூலை 1 முதல் டூவிலரில் பயணிப்போர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதிமுறை. பின்னால் உட்காருவோருக்கும் ஹெல்மெட் அவசியம். அப்படியிருந்தும், ஜூலை 3ம் தேதி ரிலீஸ் ஆகும் ஒரு படத்தில் வரும் காட்சியில் எப்படி ஹீரோ தனது குடும்பத்தோடு டூவீலரில் பயணிக்கலாம்? இதற்காக கமல் மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால் மன்னிப்பு கேட்டால் போன உயிர் திரும்பிவருமா.. இல்ல வருமாங்கிறேன்.
அது எப்படி பேசலாம்?
பாபநாசம் திரைப்படத்தில், கமல்ஹாசன் முழுக்க, முழுக்க திருநெல்வேலி வட்டார தமிழில் பேசியுள்ளார். தன்னுடன் நடிப்பவர்களையும், அவ்வாறே பேச தூண்டியுள்ளார். இதனால், மதுரை, சென்னை, கோவை வட்டார தமிழில் பேசுவோர், மனமுடைந்துள்ளனர். இதற்கு கமல் பொறுப்பேற்க வேண்டாமா?
தானே தோண்டிய தானை தலைவர்
திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில், தனது வீட்டின் கொல்லைப்புறத்தில், தானே மண்வெட்டி எடுத்து குழி தோண்டுகிறார். கட்டிட வேலைக்கு உரிய மேஸ்திரியையோ, சித்தாளையோ அவர் பயன்படுத்தவில்லை. தொழிலாளர்களுக்கு எதிரான முதலாளித்துவ, மேலாதிக்க மனோபாவம்தான் இது. அன்பேசிவம் படத்தில் கம்யூனிசம் பேசிய கமல் செய்யும் வேலையா இது.
அது எப்படி புரியலாம்
பாபநாசம் திரைப்படத்தின் 2 டிரைலர்களிலுமே, கமல் பேசும்போது, அவர் என்ன சொல்கிறார், என்ன சொல்ல வருகிறார் என்பது ரசிகர்களுக்கு எளிதாக புரிந்துவிடுகிறது. கமல் படங்களில் வரும் டயலாக்குகள் உடனடியாக புரிய கூடாது என்ற மரபை கமல் இப்படத்தின்மூலம் மீறிவிட்டார்.
வன்முறையை தூண்டுவதா
படத்தில் வரும் ஒரு காட்சியில், சிறுவன் ஒருவன், கமலை பார்த்து, 'உங்க வாய் ஏகே 47 மாதிரில்லா இருக்கு' என்று பேசுகிறான். துப்பாக்கி கலாசாரம் குறித்து படத்தில் காட்சி வைத்ததே தப்பு, அதிலும் பிஞ்சு மனதில் நஞ்சை கலப்பது போன்று ஒரு சிறுவன், அந்த வார்த்தையை சொல்லும் வகையில் காட்சி இருக்கலாமா? இது வன்முறையை தூண்டும் செயல்தானே..
முத்தான காரணம்
எட்டாவது காரணம் ரொம்ப முக்கியமானது. பாபநாசம் திரைப்படம் கமல்ஹாசன் நடித்தது. கமல் நடித்த படம் ஒன்று வழக்குகள் இன்றியே வெளியேவருது. இது சரியில்லை. இப்படி ஒரு காரணத்தை சொல்லியே கூட கேஸ் போடலாம். என்ன போராளிகளே, கேஸ்போட்டு, படம் ரிலீஸ் ஆகும் முன்பே, சிறப்பு காட்சியில் ஓசி படம் பார்க்க, இந்த காரணங்கள் போதுமா இன்னும் வேணுமா?
(பி.கு: இது முழுக்க கற்பனை காரணங்களே.. யாரையும் புண்படுத்துவதற்காக இல்லை)