33 கோடி இட்லி, 17 கோடி சப்பாத்தி, 14 கோடி கலவை சாதம்: அம்மா உணவகங்கள் சாதனை
சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இதுவரை 33.60 கோடி இட்லிகள், 13.9 கோடி கலவை சாதங்கள், 17.38 கோடி சப்பாத்திகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 293 இடங்கள் மற்றும் 7 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 300 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் ரூ.18.99 கோடி செலவில் மேலும் 107 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த 23ம் தேதி 107 புதிய உணவகங்களை உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார். வழக்கமாக முதல்வர் ஜெயலலிதா தான் அம்மா உணவகங்களை திறந்து வைப்பார். அவர் உணவகங்களை திறந்து வைக்கும் அன்று கேசரி வழங்கப்படும். தற்போது அமைச்சர் வேலுமணி திறந்து வைத்ததால் உணவகங்களில் கேசரி வழங்கப்படவில்லை.
அம்மா திறந்து வைத்திருந்தால் கேசரியாவது கிடைத்திருக்கும் என்று உணவகங்களுக்கு வந்தவர்கள் அலுத்துக் கொண்டனர். அம்மா உணவகங்களில் இதுவரை 33.60 கோடி இட்லிகள், 13.9 கோடி கலவை சாதங்கள், 17.38 கோடி சப்பாத்திகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று அரசு அறிவித்துள்ளது.
அம்மா நமக்காக கோடி கோடியா செலவு செய்கிறார்கள். அம்மா உணவகங்களில் கோடி கோடியா இட்லி, சப்பாத்தி சுடுகிறார்கள் என்று குடிமகன்கள் பெருமை பொங்க கூறுகிறார்கள்.