பட்டாசு ஆலைகளின் தீ விபத்தை தடுக்க புதிய கண்டுபிடிப்பு.. அரசுப் பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா?
பட்டாசு ஆலைகளின் தீ விபத்தை தடுக்க தானியங்கி தீயணைப்பான் கண்டுபிடித்துள்ள மாணவன் ஜெயக்குமார் ரஷ்யாவில் உள்ள அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு பயிற்சிக்கு செல்ல உள்ளார்.
விருதுநகர்: பட்டாசு ஆலைகளின் தீ விபத்தை தடுக்க தானியங்கி தீயணைப்பான் இயந்திரத்தினை அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளதுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாரணாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர் ஜெயக்குமார். தந்தை இல்லை. தாய் பட்டாசு ஆலையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் மாணவர் ஜெயக்குமார் தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுக்கும் இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளார். ஆசிரியர் கருணைதாஸ் வழிகாட்டல் மூலம் அந்த இயந்திரத்தினை உருவாக்கி உள்ளார். அந்த இயந்திரத்தினை பட்டாசுகள் சேமிக்கப்படும் குடோனில் பொருத்திவிட்டால், தீவிபத்து ஏற்படும் போது அறை வெப்பநிலை அதிகமாவதை உணர்ந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும்.
தீயினை அணைப்பதற்காக இந்த கருவியுடன் மணல் தொட்டியும் அமைக்கப்பட்டிருக்கும். அலாரம் ஒலித்தவுடன் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் விசிறியின் உதவியால் தீ மீது மணலை வீசி அணைக்கலாம்.
ஜெயக்குமாரின் கண்டுபிடிப்பை இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவசுப்ரமணியம், இங்கர்சால், உச்ச நீதிமன்ற நீதிபதி ஹெக்டே உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். ஸ்பேஸ்கிட்ஸ் என்னும் நிறுவனம் இவருக்கு இளம் விஞ்ஞானி என்னும் விருதினை அளித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலமாகதான் ஜெயக்குமார் ரஷ்யாவில் உள்ள அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு பயிற்சிக்கு செல்ல உள்ளார்.
அங்கே அறிவியல் மற்றும் விண்வெளி அறிவியல் தொடர்பான வழிகாட்டுதல் அவருக்கு அளிக்கப்படும். அங்கே விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் தங்கி ஆய்வு மேற்கொள்வார். ஏப்ரல் 24 முதல் மே 1 ம் தேதி வரை 8 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு ரூ.1.75 லட்சம் தேவைப்படுகிறது.
ஜெயக்குமார் குடும்பத்தில் இத்தனை வசதி கிடையாது. மாணவன் ஜெயக்குமார் மாநில அளவில் நடந்த பல்வேறு அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்று பல பரிசுகள் பெற்று உள்ளார். இந்நிலையில் ஜெயக்குமாருக்கு ஆசிரியர் கருணைதாஸ் ஊக்கம் அளித்து வருகிறார். மேலும் மாணவர் ஜெயக்குமாரின் பயணத்துக்காக உதவும் உள்ளங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்கிறார்.
-ஆசிரியர் கருணைதாஸின் தொடர்பு எண்: 9655816364