11 மாத குழந்தையின் மூச்சுக்குழலில் சிக்கிய அலுமினிய காகிதம்- எண்டோஸ்கோபி மூலம் அகற்றம்
சேலம்: சேலத்தில் 11 மாத கை குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கிய அலுமினிய காகிதத்தை சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி கலா. இவர்களுக்கு 11 மாதத்தில் மணிகண்டன் என்ற கைக்குழந்தை உள்ளது.
குழந்தையின் ஆரோக்கியத்துக்காக பெற்றோர் மருந்து மாத்திரை வழங்கி வருகின்றனர். கடந்த நவம்பர் 22ம் தேதி குழந்தை மாத்திரையின் மேல் இருக்கும் அலுமினிய உறையின் ஒரு பகுதியை தெரியாமல் விழுங்கிவிட்டது. மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு திணறியுள்ளது.
இதையடுத்து இரவு 7 மணிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தையை பரிசோதனை செய்த போது அலுமினிய உறை குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கி இருப்பது தெரிய வந்தது.
குழந்தையின் பெற்றோரிடம் நிலைமையின் விபரீதத்தை அரசு மருத்துவமனை டாக்டர்கள் எடுத்து கூறியுள்ளனர். பெற்றோரின் அனுமதியை தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர்.
எண்டோஸ்கோபி மூலமாக அந்த அலுமினிய காகிதம் மூச்சு குழாயில் இருந்து அகற்றப்பட்டது. குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. தற்போது குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் நலமாக உள்ளது.