கோகுலம் நிதி நிறுவனங்களில் ரெய்டு நிறைவு: ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்
சென்னை: கோகுலம் நிதி நிறுவனத்தில் கடந்த 4 நாட்களாக சோதனை நடைபெற்றது. இதில் கோகுலம் நிதி நிறுவனங்களில் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கோகுலம் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து சென்னை, கோவை, புதுச்சேரி மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவின் அந்நிறுவனத்துக்கு சொந்தமான 80 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த இந்த வருமான வரித்துறை சோதனை இன்று நிறைவடைந்தது.
கோகுலம் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அசோக் நகர் விடுதி மற்றும் கே.கே. நகரில் உள்ள அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோகுலம் நிதி நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளாமான பணம் வந்துள்ளதாகவும் இதன் மூலம் ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வருமான வரி சோதனையில் அதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஹவாலா பண மோசடி நடந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.