திருவண்ணாமலை கோவிலில் 1100 வருடம் பழமையான முதலாம் ஆதித்யன் அரிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 1100 ஆண்டுகள் பழமையான முதலாம் ஆதித்தனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 1100 ஆண்டுகள் பழமையான முதலாம் ஆதித்தனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோவிலின் 3ஆம் பிரகாரத்தில் தரையில் இந்த பழம் பெறும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் 3ஆம் பிரகாரத்தில் ராஜேந்திரன் சோழன் காலத்திய கல்வெட்டு கண்டெடுத்ததை தொடர்ந்து, திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தொல்லியல் பிரிவு மூலம் தொல்லியல் ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் புதிதாக இந்த அறிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்த ராஜ் பன்னீர்செல்வம் கூறுகையில், அண்ணாமலையார் கோவில் 7ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்திலேயே கோவில் இருந்ததற்கான சான்றாக, அப்பர் மற்றும் திருஞானசம்மந்தர் தேவார பாடல்கள் மூலம் நாம் அறியப்பட்டாலும், கல்வெட்டு சான்றாக இதுவரை நமக்கு கிடைத்துள்ள முதல் சான்று கி.பி. 885ஆம் ஆண்டு வெட்டப்பட்ட முதலாம் ஆதித்யன் கல்வெட்டே ஆகும்.
ஆதித்த சோழரின் கல்வெட்டே...
இடைக்கால சோழ சாம்ராஜ்யத்தை நிர்மாணித்த விஜயாலய சோழனின் மகனான முதலாம் ஆதித்தன், தனது போர் வலிமையால் தொண்டை நாட்டை கைப்பற்றி பிற்கால சோழர்களின் நிலையான ஆட்சிக்கு வித்திட்டான். இதுவரை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள பழங்கால கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது கி.பி. 885ஆம் ஆண்டு வெட்டப்பட்ட முதலாம் ஆதித்த சோழரின் கல்வெட்டே ஆகும்.
அதில் தகவல் இல்லை
ஆனால் அது முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுவதால் அதன் மூலம் வரலாற்று செய்திகள் ஒன்றும் பெற இயலவில்லை. இத்தகைய சூழ்நிலையில் தற்பொழுது கோவிலின் 3 ஆம் பிரகாரத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டானது, அதே முதலாம் ஆதித்த சோழரின் 19 ஆம் ஆட்சி காலத்தில் கிபி 890ல் வெட்டப்பட்டதாகும்.
சிறிது வெளிச்சமிட்டு காட்டுகிறது
ஆக இக்கல்வெட்டும் அண்ணாமலையார் கோவிலின் காலத்தால் முற்பட்ட கல்வெட்டு என்றால் அது மிகையாகாது. மேலும் இக்கல்வெட்டானது, ஏற்கனவே பதிவான கல்வெட்டால் அறிய இயலாத அக்காலத்திய வரலாற்றினில் சிறிது வெளிச்சமிட்டு காட்டுகிறது.
பொன் கழஞ்சுகள் தானம்..
இக்கல்வெட்டு மூலம், இன்றைய வேலூர் மாவட்டம் திருவல்லத்தை தலைநகராக கொண்டு முதலாம் ஆதித்தரின் கீழ்ஆட்சி புரிந்த குணமந்தன் குறும்ப கோலாலன் வைரமேகனூர்கொடுக்கன் என்ற வாணகோவரையர் வம்சத்தை சார்ந்த குறுநில மன்னர் இருபது பொன் கழஞ்சுகள் தானமாக கொடுத்த தகவல் தெரிய வருவதுடன், அக்காலத்தில் திருவண்ணாமலையானது திருவண்ணாநாடு எனவும், சதிர்வேதிமங்கலாமாக இருந்தது என்பதும் தெரிய வருகிறது.
தரைதளத்திற்கான கல்லாக..
எனினும், கல்வெட்டு பிற்காலத்தில் நடந்த புணரமைப்புகளால் இடம் பெயர்ந்து தரைதளத்திற்கான கல்லாக அமைக்க பெற்றதால், எதற்காக கொடுத்தார் என்று அறிய முடியவில்லை. இக்கல்வெட்டின் மூலம் முதலாம் ஆதித்தனின் கீழ் திருவண்ணாமலை கோவிலுக்கு மேலும் சில கொடைகள் கிடைக்கப்பெற்று உள்ளதை உறுதி செய்வதுடன், இந்த கல்வெட்டு திருவண்ணாமலை கோவிலை பதிவாகியுள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்ட கல்வெட்டுகளில் ஒன்றாகும்.
சந்தேகத்திற்கு பலம் சேர்க்கிறது...
3ஆம் பிரகாரத்தில் தரையில் காணப்பெறும் ஏராளமான சோழர்கள் கல்வெட்டுடன், இந்த அறிய கல்வெட்டும் உள்ளதை வைத்து பார்க்கையில், சோழர்களுக்கு பின்னர் வந்த மன்னர்களின் புணரமைப்பில் கட்டுமானம் சிதைக்கப்பட்டு இருக்கக்கூடும் என்பதை கருவறை கட்டுமானத்தில் காணப்படும் சில மாற்றங்கள் மூலம் ஏற்படும் சந்தேகத்திற்கு இந்த கல்வெட்டு மேலும் பலம் சேர்க்கிறது.
எங்கேனும் இருக்கிறதா..
எனவே , 1100 வருடம் பழமையான இந்த அறிய கல்வெட்டை உடனடியாக கோவில் நிர்வாகம் எடுத்து ஆவணப்படுத்தி, மேலும் இது போன்ற காலத்தால் முற்பட்ட கல்வெட்டுகள் எங்கேனும் இருக்கிறதா என்பதை ஆராய முன்வரவேண்டும். இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம் கூறினார்.