கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 12 பேர் சிறைபிடிப்பு.. இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்
கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்வதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோட்டைப்பட்டினம்: ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட துயரம் தீராத நிலையில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடிக்கும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிலையில் நேற்றுமுன்தினம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 381 விசைப்படகுகளில் 1,300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று முன்தினம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செல்லப்பா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த 6 பேரும், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 6 பேரும் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
சிறைபிடிப்பு
அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், 12 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி அவர்கள் மீன் பிடித்ததாகக் கூறி அவர்களின் 2 விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணை
பிடிக்கப்பட்ட 12 மீனவர்களும் அவர்களின் விசைப்படகுகளுடன் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் உள்ள ராணுவ முகாம் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு 12 பேரும் விசாரிக்கப்பட்டனர். பின்னர், ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் அட்டூழியம்
தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டு 11 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு தற்போதுதான் மீண்டும் மீனவர்கள் கடலுக்குள் செல்கின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் மேலும் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கல் வீச்சு
இதனிடையே ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி மீனவர்களை விரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் தங்களது வலைகளை எடுத்துக் கொண்டு அவசரமாக கரை திரும்பியுள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
கடந்த 22ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். தற்போது மேலும் 12 மீனவர்களை அவர்கள் கைது செய்து உள்ளனர். எனவே மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் ராமதேவன் தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் மீனவர்கள் கோரியுள்ளனர்.