சசிகலாவை நீக்குவதாக அறிவிக்கட்டும்... எத்தனை பேரு ஓடிப்போறோம்னு பாருங்க- சவால்விடும் எம்.எல்.ஏக்கள்
சசிகலாவை நீக்குவதாக எடப்பாடி தரப்பு அறிவித்தால் மேலும் 15 எம்.எல்.ஏக்கள் தினகரன் அணிக்கு தாவ கூடும் என கூறப்படுகிறது.
சென்னை: சசிகலாவை நீக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்த உடனேயே தினகரன் அணிக்கு ஓடிப் போக 15 எம்.எல்.ஏக்கள் தயாராக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓபிஎஸ் அணியுடன் இணைந்த பின்னரும் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் இன்னமும் எடப்பாடி அணியில்தான் இருக்கின்றன. அதேநேரத்தில் சசிகலாவை நீக்கும் முடிவை மேற்கொண்டதால் பிரளயமாக வெடிக்கவும் இவர்கள் காத்திருக்கிறார்களாம்.
சைலண்ட் மோட்
சசிகலா குடும்பத்தின் அதிதீவிர விசுவாசிகளாக இருக்கும் இந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் இப்போது சைலண்ட் மோடில் இருக்கிறார்களாம். சசிகலா தொடர்பாக முடிவு எடுக்கும் வரை இந்த மவுனம் நீடிக்குமாம்.
பொதுக்குழு
அதிமுக பொதுக்குழுவை கூட்டிதான் சசிகலாவை நீக்கும் முடிவை மேற்கொள்ள முடியும். அப்படி பொதுக்குழுவை கூட்டினால் சசிகலா ஆதரவாளர்கள் கடும் ரகளையில் ஈடுபடக் கூடும் எனவும் எடப்பாடி தரப்பு அஞ்சுகிறது.
அமைச்சர்கள் எதிர்ப்பு
தினகரன் விசுவாச அமைச்சர்கள் சிலரும் கூட சசிகலா நீக்கத்துக்கு எதிராக அமளி துமளியில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது என தயங்குகிறது எடப்பாடி தரப்பு. இருப்பினும் அடுத்தடுத்து அமைச்சர்களின் கட்சி பதவிகளை தினகரன் நீக்கி வருவதால் வேறுவழியே இல்லாமல் பொதுக்குழுவை கூட்டி நடப்பதை எதிர்கொள்வோம் என்கிற நிலையில் இருக்கிறது எடப்பாடி தரப்பு.
கட்சி மட்டுமே முக்கியம்
தினகரன் தரப்பைப் பொறுத்தவரையில் ஆட்சி போனாலும் பரவாயில்லை... கட்சி நமது கட்டுப்பாட்டில் வந்தாலே போதும்.. காவிரி டெல்டாவில் நாம் சொல்கிற 10 எம்.எல்.ஏக்கள் இருந்தால் போதும் என்கிற மனநிலையில்தான் இப்போது இருக்கிறதாம். ஆகையால் அதிமுகவை கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்ல் தினகரன் தரப்பு தயாராகவே இருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.