சென்னை ஹைகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை: சென்னை ஐகோர்ட்டில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்றுள்ளனர். இதன் மூலம் இந்த நீதிமன்றத்தில் பணியாற்றும், நீதிபதிகளின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டின் மொத்த நீதிபதிகளின் பணியிடங்களின் எண்ணிக்கை 60 ஆக இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் நீதிபதிகளின் எண்ணிக்கை 39 ஆக மட்டுமே இருந்தது.
இதையடுத்து, காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் நியமிக்க 19 வழக்கறிஞர்கள், 11 மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான ஐகோர்ட் நீதிபதிகள் கொண்ட குழு சுப்ரீம் கோர்ட்டுக்கும் மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது. இந்த பட்டியல் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் ஆய்வு மற்றும் மத்திய சட்டத்துறையின் ஆய்வுக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து, முதல்கட்டமாக 15 பேரின் பெயர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, வழக்கறிஞர்கள் வி.பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியன், எம்.கோவிந்தராஜ், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், ஜெ.நிஷாபானு, எம்.எஸ்.ரமேஷ், எஸ்.எம்.சுப்பிரமணியம், டாக்டர் அனிதா சுமந்த், மாவட்ட நீதிபதிகள் பஷீர் அகமது, டி.ரவீந்திரன், எஸ்.பாஸ்கரன், பி.வேல்முருகன், ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் ஆகிய 15 பேர் புதிய நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றுள்ளனர்.
தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் 15 புதிய நீதிபதிகளுக்கும் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.