புதுக்கோட்டை: கொள்ளையனிடம் மீட்கப்பட்ட நகைகளில் 17 கிலோ தங்கம் எங்கே?- சுட்டது யார்?
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் அமைந்துள்ள சிட்டி யூனியன் வங்கியில் தங்க நகைகளை திருடன் ஒருவன் மூட்டை கட்டி திருட முயன்று பாதியிலேயே போட்டு விட்டுப் போன சம்பவத்தில் புதிய திருப்பமாக, மீட்கப்பட்ட நகைகளில் 17 கிலோ தங்க நகைகளைக் காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
கீரனூர் அருகே உள்ள குளத்தூரில் அமைந்துள்ள சிட்டி யூனியன் வங்கி ஒன்றில் கடந்த மாதம் 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தங்கத்தைக் கொள்ளை அடிக்க முயற்சி நடந்தது. திருடிய நகைகளை மூட்டையாக கட்டிக் கொண்டு எடுத்துச் சென்ற திருடன், ரோந்து வந்த போலீஸாரைப் பார்த்ததும் கீழே போட்டு விட்டுத் தப்பி ஓடி விட்டான்.
இதையடுத்து போலீஸார் அந்த மூட்டையை மீட்டனர். அதில் 35 கிலோ தங்க நகைகள் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று வங்கி மேலாளர் அனுராதா தங்க நகைகளைக் கணக்கிட்டு பார்த்தபோது மீட்கப்பட்ட தங்க நகைகளில் 17 கிலோ தங்கம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மேலாளர் அனுராதா போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி, 633 பாக்கெட்டுகளில் இருந்த 17 கிலோ தங்கம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மாயமாகியுள்ள நகைகளை எடுத்தது யார் என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது.