தினகரனுக்கு 17 எம்.எல்.ஏக்கள் போதும்.. எடப்பாடி அரசைக் கவிழ்க்க!
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கவிழ்க்க தினகரன் ரொம்ப மெனக்கெடத் தேவையில்லை. வெறும் 17 எம்.எல்.ஏக்கள் போதுமாம்.
ஜெயலலிதா இறந்ததும் சசிகலா பக்கம் தாவிய அதிமுகவின் பெரும்பான்மையான நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் தற்போது அவர்களால் தங்களுக்கு ஆதாயம் நின்று போய் விட்டதாக உணர்ந்ததும் தற்போது அவர்களைத் தூக்கிப் போட்டு விட்டனர்.
அடுத்து ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்து புதிய களம் காணத் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தினகரன் என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. டெல்லியிலிருந்து கைது அபாயம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டுள்ள நிலையில் அவர் நிச்சயம் எடப்பாடி அரசைக் கவிழ்க்கவே முயற்சிப்பார் என்று கூறப்படுகிறது.
எத்தனை பேர் உள்ளனர்
சட்டசபையில் சபாநாயகரையும் சேர்த்து அதிமுகவிற்கு மொத்தம் 135 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. இதில் ஓ.பி.எஸ். பக்கம் சென்ற 11 பேரை தவிர்த்துவிட்டால் மீதி 123 பேர்.
தினகரன் தரப்பில் 122 பேர்
இதில் 122 பேர் ஆதரவளித்து தான் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியது. இந்த 122-ல் ஆறு பேர் மட்டும் தினகரன் பக்கம் வந்தால் போதும் ஆட்சி கவிழ்ந்து விடும்.
11 பேர் முட்டுக் கொடுத்தால்
அப்படி நடந்தால் ஓ.பி.எஸ் பக்கம் உள்ள 11 பேரும் சேர்ந்து முட்டுக் கொடுத்துக் காப்பாற்றி விடுவார்கள். எனவே மேலும் 10 பேரை தினகரன் தரப்பு இழுத்து, அதாவது மொத்தம் 17 பேரை இழுத்தால் எடப்பாடி அரசு கவிழும். காரணம், திமுக நிச்சயம் எடப்பாடி அரசுக்கு ஆதரவு தராது.
தினகரன் செய்வாரா
ஆனால் தினகரன் அவசரப்பட்டு ஆட்சியைக் கவிழ்ப்பாரா அல்லது எடப்பாடி தரப்புடன் ரகசிய டீலில் இறங்குவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளைக்குள் இதுகுறித்த முடிவு தெரிய வரலாம்.