மாயமான ஏ.என்.32 விமானத்தை தேடும் பணியில் 17 கப்பல், 18 விமானங்கள்.. கடலுக்கு அடியில் தேட முடிவு
சென்னை: மாயமான இந்திய விமானப்படையின் ஏ.என்.-32 விமானத்தை தேடும் பணியில் 17 கப்பல்கள், 18 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரத்திலிருந்து அந்தமான் புறப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக சரக்கு விமானம் கடந்த 22ம் தேதி மாயமானது.
29 பேர் பயணித்த அந்த விமானத்தை தேடும் பணியில் 17 கப்பல்கள் 14 ஹெலிகாப்டர்கள், 9 போர் விமானங்கள் ஈடுபட்ட போதிலும் கடந்த 4 நாட்களாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கடற்படை தளபதி
தேடுதல் வேட்டை குறித்து கடற்படை தளபதி சுனில் லன்பா கூறியதாவது: தேடுதல் பணியில் 18 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 17 கப்பல்களும் தேடி வருகின்றன. இதுவரை விமானம் குறித்தோ அதில் பயணித்தவர்கள் குறித்தோ துப்பு கிடைக்காதது துரதிருஷ்டமே.
தகவல்கள்
செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படம், விமான சென்சார் சிக்னல் போன்றவற்றின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தேடுதல் வேட்டை தொடர்ச்சியாக நடக்க கூடியது. இவ்வாறு கடற்படை தளபதி சுனில் லன்பா தெரிவித்தார்.
வர்த்தக கப்பல்
வங்கக்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களுக்கு, விமானம் மாயமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்தவர்களில் உயிருக்கு போராடியபடி யாரேனும் தென்பட்டால் அவர்களை காப்பாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தமானிலும் உஷார்
தேடுதல் வேட்டை எல்லைக்கு அப்பால் இருந்தாலும் கூட, அந்தமான் நிகோபார் தீவுகளிலுள்ள பாதுகாப்பு படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஏதேனும் விமான பாகங்கள் மிதந்து வருகின்றனவா என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டையை நடத்த பாதுகாப்பு படையினர் முடிவு செய்துள்ளனர்.