தூத்துக்குடி அருகே புதிய மதுக்கடை திறக்க முயற்சி: 17 கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்
தூத்துக்குடி அருகே ஏரலில் புதிய டாஸ்மாக் கடை திறக்க முயன்றதைக் கண்டித்து 17 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
தூத்துக்குடி: ஏரல் அருகே புதிய மதுக்கடையை திறக்க முயன்றதால் 17 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் டாஸ்மாக் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அந்தந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதன்படி ஏரல் முக்காணி ரவுண்டானாவில் உள்ள டாஸ்மாக் கடையும் அடைக்கப்பட்டது.
இந்த கடையை ஏரல் அருகே உள்ள கொற்கை குளத்துக்கரை பகுதியில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை கொண்டு வந்து இறக்கினர்.
இதுகுறித்து தகவல் சுற்று வட்டார கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆவேசம் அடைந்த அவர்கள் 17 கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்தனர். வழவல்லான், தெற்கூர், கொற்கை, கொற்கை மணலூ், அரியபுரம், லட்சுமிபுரம், அதிசயபுரம், அண்ணாநகர், அக்கசாலை உள்ளிட்ட 17 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டனர்.
அவர்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு இன்ஸ்பெக்டர்கள் கோகிலா, விஜயகுமார், வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் கிராம மக்கள் கேட்காமல் கலெக்டர் அல்லது உயர் அதிகாரிகள் வந்து டாஸ்மாக் கடையை அமைக்க மாட்டோம் என தெரிவிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து இறக்கப்பட்ட மதுபாட்டில்கள் வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டது. அதன் பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் அந்த பகுதி மக்கள் புதிய கடை உள்ள இடத்தில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.