சென்னை அதிமுக மாநகராட்சி நிலைக்குழு தலைவர் உட்பட 2 பேர் அதிரடி நீக்கம் – ஜெ.உத்தரவு
சென்னை: அ.தி.மு.கவில் இருந்து சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் உள்பட 2 பேர் அதிரடியாக நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பில், "அ.தி.மு.கவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி அ.தி.மு.கவுக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் வட சென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த 38 ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.சந்தானம் (சென்னை மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர்).
38 ஆவது வார்டு வட்ட செயலாளர் பி.வெங்கடேசன் ஆகியோர் இன்று முதல் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். அ.தி.மு.கவினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது எனக்கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட 2 பேரும் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மாற்று கட்சியினருடன் தொடர்பு வைத்திருந்ததால் அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக அ.தி.மு.க வட்டாரம் தெரிவித்தது.