சென்னை: முதியவர் வேலியப்பன் கொலை: ‘பாம்பு’ வினோத் உள்பட 2 பேர் கைது
சென்னை: சென்னை சூளைமேட்டில் தனியாக வசித்து வந்த முதியவர் வேலியப்பன் நகைக்காக கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் பாம்புவினோத் என்பவன் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சூளைமேடு பகுதியில் தனியாக வசித்து வந்த வேலியப்பன் (87) கடந்த 18.11.2014 அன்று பிற்பகல் மர்ம நபர்கள் சிலர் கூர்மையான ஆயுதங்களால் கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் கொடூரமாக குத்தி கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் 2 தங்க மோதிரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக, 18.11.2014 அன்று சூளைமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றாவளிகளை கண்டுபிடித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதனையடுத்து கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் வினோத்குமார் (எ) பாம்பு வினோத் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய 2 கத்திகள் மற்றும் இறந்தவரிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற மோதிரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாம்பு வினோத் பல குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு சிறை சென்றவன் என்பதும், ஒரு குற்ற வழக்கில் 22 மாதங்கள் சிறை தண்டனை பெற்றவன் என்பதும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 15.10.2014 அன்று சிறையிலிருந்து வெளியே வந்துள்ளான் என்பதும் தெரியவந்தது.