2 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்!
சென்னை: சட்டசபையில் அவைக் காலவர்களைத் தாக்கியது தொடர்பான வழக்கில் 2 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
எம்.எல்.ஏக்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சிறப்பு எஸ்ஐ நல்ல திடகாத்திரமாக, கட்டுறுதியுடன் இருப்பதால் அவருக்கு ஒன்றும் ஆகியருக்காது என்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி தேவதாஸ் கருத்து தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் 19ம் தேதி குடிமகன் என்ற வார்த்தை தொடர்பாக தேமுதிகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. தேமுதிகவினர் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு திரண்டு பெரும் மோதலில்ஈடுபட்டனர்.
இதையடுத்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது அவைக் காவலர்களை தேமுதிகவினர் தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. கூட்டத் தொடர் முழுவதும் தேமுதிக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மீது, சபை உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டு உள்ளது. இதற்கு வரும், 27ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என, உரிமைக் குழு மூலம் அவர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேமுதிக எம்.எல்.ஏக்கள் மோகன்ராஜ், சேகர் மற்றும் தினகரன் ஆகியோர், போலீஸ் உதவி ஆய்வாளர் ஜெயராஜை தாக்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, போலீஸ் உதவி ஆய்வாளர் தரப்பில், சட்டசபை செயலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மனு, சென்னை பூக்கடை போலீஸ் துணை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில் நேற்று கோட்டை காவல் நிலையத்தில் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவானது. இதனால் மூவரம் கைதாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மூவரும் தலைமறைாகி விட்டனர். மேலும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கூடவே கொறடா வி.சி.சந்திரகுமாரும் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கடந்த 19ம் தேதி, சட்டசபையில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, எங்கள் மீது, தலைமைச் செயலக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியதாகவும், மிரட்டியதாகவும், புகார் கூறப்பட்டு உள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர், எதிர்க்கட்சி தலைவர்களை மோசமாக விமர்சித்தார். எதிர்க்கட்சி தலைவரான, எங்கள் கட்சி தலைவரையும் விமர்சித்தார். அவரது வார்த்தைகளை, சபைக் குறிப்பில் இருந்து நீக்கும்படி, தேமுதிக எம்.எல்.ஏ.,க்கள் கோரினர்.
எங்களை வெளியேற்றும்படி, சபாநாயகர் உத்தரவிட்டார். சபைக் காவலர்கள், தேமுதிக எம்.எல்.ஏ.,க்களை வலுக்கட்டாயமாக இழுத்தனர்; சபாநாயகர் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கையை கண்டித்து, சபைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தோம். எம்.எல்.ஏ.,க்களை துன்புறுத்தவும், செல்வாக்கை குலைக்கவும், எங்களுக்கு எதிராக, பொய்யான புகாரை கொடுக்கும்படி செய்துள்ளனர். நாங்கள் எந்த குற்றமும் புரியவில்லை. எனவே, எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.,
இந்த மனுக்கள் நீதிபதி தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரகுமாரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை என்பதால் அவரது பெயரை மனுவிலிருந்து நீக்கினர். பின்னர் மற்ற 2 பேருக்கும் முன்ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
2 பேருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.