காரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ்: இளம்பெண் பலாத்காரம்
சிவகங்கை: காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியிடம் போலீஸ் எனக்கூறி இரண்டு கயவர்கள், இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆவுடைபொய்கை கிராமம் உள்ளது. திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தை சுற்றி வனப்பகுதியும், ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் இந்த சாலை ஓரத்தில் காதலர்கள் அதிக அளவில் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.
இதேபோல், திங்கட்கிழமையன்று மாலை ஆறு மணி அளவில் ஆயுடைபொய்கை என்னுமிடத்தில், தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண், தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது காக்கி உடையில் வந்த இரண்டு பேர், அந்த பெண்ணை விசாரணைக்காக இன்ஸ்பெக்டர் கூப்பிடுவதாகவும், நீயும் பள்ளத்தூர் காவல்நிலையத்திற்கு வந்துவிடு!' என காதலனிடம் கூறிவிட்டு, இளம்பெண்ணை தங்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றிருக்கின்றனர்.
கடத்திய கயவர்கள்
காதலனும் தனது காதலியை மீட்க வேண்டும் என்ற வேகத்தோடு அவர்களை பின் தொடரந்து சென்று கொண்டிருந்த பொழுதே சிறிது நேரத்தில் அவர்கள் மாயமாக மறைந்துவிட்டனர். அவர் பள்ளத்தூர் காவல் நிலையம் சென்று கேட்கவே, 'நாங்கள் அப்படி யாரையும் கூட்டி வரவில்லை!' என தெரிவித்திருக்கின்றனர்.
தேடுதல் வேட்டை
இதனையடுத்து இளம்பெண்ணை தேடி காவல்நிலையம் வந்த நண்பர் நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கடத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அவரது காதலியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, சுவிட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது எனக் கூறியிருக்கிறது.
பலாத்கார புகார்
இந்நிலையில், செவ்வாய்கிழமையன்று காலை அந்த இளம்பெண் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் மனு அளித்துள்ளார். அதில், '' தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, காக்கி உடையணிந்த இருவர் வந்து நாங்கள் போலீஸ் என்று கூறி, என்னை வண்டியில் ஏற்றி கொண்டு சென்று விட்டனர். அவர்கள் என்னை காட்டிற்குள் அழைத்து சென்று இரவு முழுவதும் தன்னை இருவரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். அதிகாலை நான்கு மணி அளவில் என்னை மீண்டும் ரோட்டிற்கு கொண்டு வந்து விட்டு விட்டு சென்று விட்டனர்" என கூறியுள்ளார்.
வாடிக்கையான நிகழ்வு
இது போன்ற சம்பவம் இது முதல் முறை அல்ல என்று அப்பகுதி மக்கள் கூறுகி்ன்றனர். ''காதலர்கள் தனிமையில் இப்பகுதியில் வருவதை நோடமிட்டு, அவர்களை பின் தொடர்ந்து வந்து மிரட்டி, பெண்ணை பலாத்காரம் செய்வது இந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காதலர்கள் வீட்டிற்கு தெரியாமல் வருவதால், மானத்திற்கும் பயந்து வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இதுவே இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வசதியாக போய்விட்டது. பலரிடம் நகையை பறித்து கொண்டு, பலாத்காரமும் செய்துள்ளனர். அந்த பெண்கள் ரோட்டில் செல்வோரிடம் சொல்லி அழுதுள்ளனர்" என்கின்றனர்.
விரைவில் கைது
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தொடர்ச்சியாக அந்த பகுதியில் இதுபோன்று சம்பவம் நடைபெற்று வருவதாக புகார் வருகிறது. போலீஸ் என்று கூறினால் இளம் வயதினர் பயந்துவிடுவார்கள் என்று இவ்வாறு செய்கின்றனர். அந்த பெண் கூறிய அடையாளங்களை வைத்து விசாரணை செய்து வருகிறோம். விரைவில் அவர்களை கைது செய்து விடுவோம்'' என்றனர். மேலும் பாலியல் வன்செயலுக்கு உள்ளான பெண், காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி போலீஸ்
போலீஸ் என்று கூறி பலாத்கார செய்பவர்கள் உண்மையிலேயே போலியானவர்களா? அல்லது காவல்துறைக்கு நெருக்கமானவர்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த குற்றவாளிகள் சிக்கினால், இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியே தெரியவரும் என்பது காரைக்குடிவாசிகளின் நம்பிக்கையாகும்.