விழுப்புரம்: விழுப்புரம் அருகே சேஷசமுத்திரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்ததற்காக மேலும் 2 பேரின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் தொடர்கிறது.விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு இக்கோவில் தேரோட்ட திருவிழாவின் போது இரு சமுகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அக் கோவிலில் திருவிழா நடத்தப்பட்வில்லை.இதன் பின்னர் இந்த ஆண்டு காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அரசு அதிகாரிகள் அனுமதியுடன் திருவிழாவை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் எதிர்தரப்பினர் திருவிழா தேர் மற்றும் காலனி பகுதி வீடுகளை அண்மையில் தீ வைத்து நாசப்படுத்தினர். இதனால் மீண்டும் அங்கு கலவரம் ஏற்பட்டது.போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.இச்சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு சேஷசமுத்திரம் காலனி மக்கள் பேட்டி அளித்திருந்தனர். இதில் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு பேட்டி அளித்த மேலும் 2 பேரின் வீடுகளை கடந்த திங்கள்கிழமையன்று தீ வைத்து எரித்துள்ளனர். வீடுகள் மீது அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியும் உள்ளனர்.அத்துடன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தால் கொலை செய்வோம் என்றும் கொலை மிரட்டலும் விடுத்திருப்பதாக சேஷசமுத்திரம் காலனி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.