காவிரியின் குறுக்கே அணைக்கு எதிர்ப்பு: தஞ்சாவூரில் ரயிலை மறித்த வைகோ உட்பட 1000 பேர் கைது!
தஞ்சாவூர்: காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்டும் கர்நாடகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
காவிரி ஆற்றின் மீது மேகே தாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு இரு அணைகள் கட்ட திட்டமிட்டிருப்பதை கண்டித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நூற்றுக் கணக்கோர் திரண்டிருந்தனர். ஆனால், ரயில் நிலைய நுழைவு வாயிலில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.என்றாலும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தடுப்பு நிலைகளை தூக்கி எறிந்துவிட்டு உள்ளே நுழைந்தனர். நூற்றுக் கணக்கானோர் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்டினால் விவசாயம் பாதிக்கப்படும் எனவும் மேலும், 5 கோடி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் எதிர்காலம் காவிரி நீரில் தான் உள்ளது. நதிகள் தேசிய மயமாக்கப்படவேண்டும். இல்லையேல் இந்தியா பல நாடுகளாக பிரிந்துவிடும்.காவிரி பிரச்னையில் அ.தி.மு.க. அரசு நீதிமன்றத்தை முறையாக அணுகி வருகிறது. அதற்கு ம.தி.மு.க. என்றும் ஆதரவு அளிக்கும் என்றும் வைகோ பேசினார்.
போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட அனைவரும் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் பிற்பகலில் விடுவிக்கப்பட்டனர்.