திருட்டு டிவிடி கும்பலிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம்: சேலத்தில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் கைது!!
சேலம்: புதுப்பட திருட்டு டிவிடி தயாரித்த கும்பலை ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு விடுவித்த 2 சப் இன்ஸ்பெக்டர்களை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் சோளம்பள்ளத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன். புதுப்பட டிவிடிகளை திருட்டுத்தனமாக தயாரித்து விற்பனை செய்து வந்தார். சூரமங்கலம் போலீசாரின் நெருக்கடி காரணமாக அவர் சீலநாயக்கன்பட்டியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து ரகசியமாக புதிய படங்களின் டிவிடிக்களை தயாரித்து வந்தார்.
பரமேஸ்வரன் சீலநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் புதுப்பட டிவிடி தயாரித்து வருவது குறித்து அன்னதானப்பட்டி சப் இன்ஸ்பெக்டர் நவநீதகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை மற்றொரு சப் இன்ஸ்பெக்டர் வேணுகோபாலை அழைத்துக் கொண்டு, சிடி தயாரிக்கும் வீட்டுக்குச் சென்றார்.
சப் இன்ஸ்பெக்டர்கள் இருவரும் அங்கிருந்த பரமேஸ்வரன் அவரது கூட்டாளிகள் ராம்குமார், சம்பத்குமார், கார்த்தி ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து புதிய படங்களின் ஆயிரம் டிவிடிக்களை பறிமுதல் செய்தனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு இது பற்றிய தகவல் அறிந்து ரோந்து போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். இதனிடையே பரமேஸ்வரன் மற்றும் கூட்டாளிகளை விடுவிக்க நவநீதகுமாரும், வேணுகோபாலும் பேரம் பேசியுள்ளனர். இதற்காக ரூ.1 லட்சத்து 97ஆயிரத்தை பெற்றுக் கொண்டு அவர்களை விடுவித்தனர்.
புதுப்பட டிவிடிக்கள் மற்றும் கம்ப்யூட்டர்களையும் பரமேஸ்வரனிடேமே கொடுத்துவிட்டனர். இதுகுறித்த தகவல் போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தெரியவந்தது. இதையடுத்து விசாரணை நடத்துமாறு துணை கமிஷனர் பாபுவுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் விடிய விடிய நடைபெற்ற விசாரணையில் 2 சப் இன்ஸ்பெக்டர்களும் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து இருவரையும் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சப் இன்ஸ்பெக்டர்கள் நவநீதகுமார், வேணுகோபால் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே போல சிடி கும்பல் தலைவன் பரமேஸ்வரன், ராம்குமார், சம்பத்குமார், கார்த்தி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான சப் இன்ஸ்பெக்டர் நவநீதகுமார் நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தை சேர்ந்தவர். 2011ம் ஆண்டு தான் நேரடி எஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்டார். சேலம் மேற்கு சரகத்தில் மாநகர நுண்ணறிவு பிரிவு தலைமையிடத்து எஸ்.ஐ.யாக பணியாற்றினார்.
கடந்த அக்டோபர் மாதம் டவுன் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு வழக்கறிஞர் ஒருவர் மனைவியுடன் வந்தார். அப்போது அப்பெண்ணை முறைத்து பார்த்ததாக வழக்கறிஞருக்கும் சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டது. அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர்.
அதன் பிறகு கடந்த மாதம் நவநீதகுமார், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். தற்போது புதுப்பட திருட்டு டிவிடி தயாரிப்பு கும்பலிடம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். 2 சப் இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.