நெல்லை அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற 2 சகோதரிகள் நீரில் மூழ்கி பலி
நெல்லை: நெல்லை அருகே கிணற்றில் குளித்த போது 9ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே மூன்றடைப்பு உள்வாய்க்கால் பகுதியை சேர்நதவர் சுப்பையா. அவரது மகள் ரோஸ்மேரி. சுப்பையாவின் தம்பி மகள் திருமால். ரோஸ்மேரியும், திருமாலும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் விவசாய கூலிகள் என்பதால் காலையிலேயே வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இருந்த திருமாலும், ரோஸ்மேரியும் அப்பகுதியை சேர்ந்த உறவினர் பால்ராஜ் மகள் பிரியா என்ற சிறுமியுடன் அருகில் உள்ள தனியார் விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர்.
ரோஸ்மேரிக்கு ஏற்கனவே நீச்சல் தெரியும் என்பதால் திருமால் தனக்கு நீச்சல் கற்று தருமாறு கேட்டுள்ளார். இதை தொடர்ந்து கிணற்றின் விளிம்பில் ஆடைகளை வைத்துவிட்டு மாணவிகள் கிணற்றில் இறங்கினர். இந்த நிலையில் நீச்சல் கற்று கொண்டிருந்த திருமால் திடீரென மூச்சு திணறியதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரோஸ்மேரி திருமாலை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ரோஸ்மேரியை திருமால் இருக்கமாக பற்றிக் கொண்டதால் இருவரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
வெகு நேரமாகியும் கிணற்றில் இருந்து இருவரும் வெளியே வராததால் கிணற்று கரையில் இருந்த சிறுமி அழுது கொண்டே அந்த வழியாக வந்த சிலரிடம் விபரத்தை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் கிணற்றில் குதித்து இருவரையும் வெளியே கொண்டு வந்தனர். இது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அலறி அடித்து தலையில் அடித்துக் கொண்டு கிணற்றை நோக்கி ஓடி வந்தது பரிதாபமாக இருந்தது. மீட்கப்பட்ட மாணவிகள் மயக்கத்தில் இருந்ததால் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.