கோவையில் 'செல்பி'யால் கிணற்றுக்குள் மூழ்கிய மாணவன்.. 2-வது நாளாக உடலை தேடும் பணி தீவிரம்
கோவை: கோவை அருகே செல்பி எடுத்த போது 120 அடி ஆழ கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவர் உடலை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடற்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
கோவை தென்னம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார். அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மகன் ஹரீஸ் (17) பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சுதந்திர தின விடுமுறை நாளான நேற்று ஹரீஸ் தனது நண்பர்கள் 4 பேருடன் கோவை ஜி.வி.ரெசிடென்சி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் அனைவரும் 120 அடி ஆழமுள்ள அபாய கிணற்றை எட்டிப் பார்த்தபடி செல்போனில் 'செல்பி' எடுத்துள்ளனர்.
ஹரீஷ் கிணற்றின் படிக்கட்டில் சில அடி தூரம் இறங்கி நின்று போட்டோ எடுக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கால் நழுவி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய அவர் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி விட்டாராம்.
இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் கிணற்றுக்குள் குதித்து மாணவனை தேடியுள்ளனர். 120 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் சுமார் 60 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால், மாணவனின் உடலை மீட்க முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய பணி இரவிலும் நீடித்த நிலையில், அதிகாலை 3.30 மணி வரை உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து, இன்று 2-வது நாளாக உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரெட்பீல்ட்சில் உள்ள கடற்படை வீரர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர்கள், கடற்படையில் உள்ள 'டைவிங் சூட்' எனப்படும் தண்ணீருக்குள் மூழ்கி தேடும் கருவிகள் மூலம் மாணவனின் உடலை தேடும் பணியில் ஈடுபடுகின்றனர்.