சென்னை ஸ்பென்சர் பிளாசா நகரும் படிக்கட்டில் தவறி விழுந்த சிறுவன் விரல் துண்டிப்பு
சென்னை: ஸ்பென்சர் பிளாசா ஷாப்பிங் மாலில், எஸ்கலேட்டரில் தடுமாறி விழுந்த சிறுவன் விரல் பறிபோயுள்ளது.
பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ். இவர் சென்னையிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு, மனைவி சரண்யா, மற்றும் இரண்டரை வயது மகன் கிரீஷ் ஆகியோருடன் வந்திருந்தார்.
இந்நிலையில், இன்று ஸ்பென்சர் பிளாசாவை சுற்றி பார்க்க குடும்பத்தோடு சந்தோஷ் சென்றார். நகரும் படிக்கட்டில் சென்றபோது, கிரீஷ் தடுமாறி விழுந்தான். படிக்கட்டு முடியும் இடத்தில் அவனது கை விரல்கள் மாட்டிக் கொண்டன.
இதில் 3 விரல்கள் பலத்த சேதம் அடைந்தன. ஒரு விரல் துண்டாகியது. பதறிய சந்தோஷ், மகனை தூக்கிக் கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு கிரீஷ் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நாளை சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது. அப்போது துண்டான விரலை ஒட்ட வைக்க முயற்சி நடைபெறும்.
இதனிடையே சிறுவனை கூட்டிச் சென்ற அவசரத்தில் விரலை ஸ்பென்சர் பிளாசாவிலேயே விட்டுச் சென்றுள்ளனர் சந்தோஷ் தம்பதி. அங்கிருந்த வேறு நபர்கள்தான் விரலை மருத்துவமனை கொண்டு சேர்த்ததாக கூறப்படுகிறது.