விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை மாயம்.. பிணமாக மீட்டெடுப்பு.. எண்ணூரில் பரபரப்பு
எண்ணூரில் 2 வயது குழந்தை நேற்று மாயமானது. அந்தக் குழந்தை பிணமாக இன்று மீட்டுக்கப்பட்டுள்ளது.
சென்னை: பெண்கள் குழந்தைகள், சிறுமிகள் காணாமல் போவது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. எண்ணூரில் நேற்று வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை மாயமாகி இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளது.
எண்ணுரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்டுள்ள பகுதி சுனாமி குடியிருப்பு. இங்கு முத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.
ரித்திகா நேற்று வீட்டு வாசலின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் குழந்தை வெளியில் காணவில்லை. பதறிப் போன பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, போலீசாரிடம் முத்து புகார் அளித்தார்.
இந்நிலையில், குழந்தை ரித்திகா கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும், அவரது உடல் கைப்பற்றப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் எண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.