டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி – மயிலாடுதுறை மக்கள் பீதி!
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இரண்டு வயதான குழந்தை ஒன்று டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆனந்த தாண்டவபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன், விவசாயி. இவரது மகள் திவ்யதர்ஷினி. இவளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது.
பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுமி இறந்தாள். இது குறித்த தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.
காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு தனியாரிடம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொண்டு முறையான சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.