ஹைகோர்ட்டில் மது அருந்திய 3 பேர் உட்பட 20 வழக்கறிஞர்களுக்கு பார்கவுன்சில் அதிரடி தடை!!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறைக்குள் போராட்டம் நடத்தியவர்கள், நீதிமன்ற வளாகத்தில் மது அருந்தியவர்கள் என மொத்தம் 20 வழக்கறிஞர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் சங்கம்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறைக்குள் நுழைந்து கடந்த செப்டம்பர் 14-ந் தேதியன்று தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி 10 வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தமிழகம்-புதுவை பார்கவுன்சில் மும்முரம் காட்டியது. இதன்படி தலைமை நீதிபதி அறைக்குள் போராட்டம் நடத்திய 10 பேர், மதுரை வழக்கறிஞர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை பார்க்க அனுமதி கோரி போராடிய 7 பேர் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் மது அருந்திய 3 பேர் என மொத்தம் 20 வழக்கறிஞர்கள் மீது தமிழகம்- புதுவை பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த 20 பேரும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணை முடியும் வரையில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழகம்- புதுவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.